புதன், 7 ஜூன், 2017

19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்

வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

குறைந்த பரப்பில் பசுந்தீவனம்

வறட்சி காரணமாக விவசாயச் சார்புத் தொழிலான கால்நடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கால்நடைகளுக்குப் பசுந்தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் கால்நடைகளைச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வறட்சி காலத்தில் மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு (ஹைட்ரோபோனிக்ஸ்) முறையைக் கால்நடைத் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மூன்று அடி அகலம் ஆறு அடி உயரம் கொண்ட சிறிய அறையில் பசுந்தீவனம் விதையிட்டு ஏழு நாட்களில் எட்டு கிலே பசுந்தீவனத்தை அறுவடை செய்து பயன்பெறலாம். இது குறித்துச் சேலம் கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் ஜெயந்தி கூறியதாவது:

கோடை தொடங்கும் முன்னரே நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சியின் பிடியில் விவசாய நிலங்கள் சிக்கியுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெயிலும் கைகோத்துக் கொண்ட நிலையில், தீவன வளர்ப்பு அபூர்வமாகிவிட்டது. கோடை வறட்சிக்குத் தாக்குப்பிடித்து, கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கும் விதமாக, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறையை அறிமுகம் செய்துள்ளேம்.

மக்காச்சோள இலைகள்

மக்காச்சோள விதையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஃபாடர் மிஷின் மூலம் மக்காச்சோளம் விதையை 15 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ்வரை வெப்பப்படுத்தி, 60 சதவீதம் முதல் 70 சதவீதம் ஈரப்பதமாக்க வேண்டும். இவற்றைச் சாக்குப் பைகளில் போட்டு, தண்ணீர் தெளித்தபடி இருந்தால், மூன்று-நான்கு நாட்களில் முளைவிட்டுப் பயிர் வளர ஆரம்பிக்கும்.

பின்னர்த் தனித்தனி அடுக்குகளில் டிரேவில் வைத்து முளைவிட்ட பயிருக்குத் தண்ணீர் ஊற்றிவந்தால், ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு மூன்றரை லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ விதை ரூ.19 செலவும் செய்தால், ரூ.64 மதிப்புள்ள எட்டு கிலோ பசுந்தீவனத்தைப் பெற முடியும். இந்த முறையை மாநிலம் முழுவதும் பரவலாக்க விவசாயிகளிடம் கால்நடைத் துறை மற்றும் வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றார்.

மானிய விலையில் இயந்திரம் தேவை

பசுந்தீவன வளர்ப்பு தொடர்பாகச் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அபிநவம் கிராம விவசாயி ஜெயராமன் கூறியதாவது:

மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை அருமையான திட்டம். இதற்கான இயந்திரம் ரூ.61 ஆயிரம். இதை மானிய விலையில் விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலம் குறைந்த இடத்தில், மலிவு விலையில் விவசாயிகள் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து மூன்று மாடு, 30 ஆடுகளுக்குப் பற்றாக்குறையில்லாமல் வழங்க முடியும். கிலோ எட்டு ரூபாய் கொடுத்து வைக்கோல் வாங்கும் நிலையில், வெறும் நான்கு ரூபாய் செலவில் தினசரி எட்டு கிலோ தீவனம் கிடைப்பது வரவேற்புக்குரியது.

கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தொடர்புக்கு: 9629986159
-உண்மை இதழ்,1-15-5.17

 


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சோலார் விளக்கும் பூச்சியை விலக்கும்




கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறி உருவாக்கப்பட்டுள்ளது
சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களில் பூச்சி மேலாண்மைக்காக சோலார் விளக்குப்பொறியை உருவாக்கியுள்ளனர் புதுவை சாப்ஸ் (SAFS) வேளாண் நிறுவன விஞ்ஞானிகள். அது குறித்த விவரங்களை விவரிக்கிறார், சாப்ஸ் வேளாண் நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் காதர்...
வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறைதான் இந்த சோலார் விளக்குப்பொறி. இயற்கை முறையில் இதன் மூலம் பூச்சிகளைக் கட்டுபடுத்தலாம்.
முற்றிலும் சூரிய ஒளியில் தானியங்கி முறையில் இந்த சோலார் விளக்குப்பொறியை வடிவமைத்து உள்ளோம்.
அதிலும் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை முழுத் திறனுடன் பயிர்களை அழிக்கும் நேரத்தைத் தெரிந்து அதற்கேற்றாற்போல சோலார் விளக்குப் பொறியை வடிவமைத்து உள்ளோம். பூச்சியியல் நிபுணர் முனைவர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன் சூரியன் மறைகின்ற நேரம் முதல் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் செயல்படும் விதமாக இந்தக் கருவியை மைக்ரோ கண்ட்ரோல் போர்டு மூலம் வடிவமைத்தோம். இதில் சூரிய சக்தியை சேமிக்க பேட்டரிகள் உள்ளன.
இந்தச் சோலார் விளக்குப் பொறியை தோட்டப்பயிர்கள், காய்கறிப் பயிர்கள், நெல் எண்ணெய் வித்துப் பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள், என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். தேவையான இடத்திற்கு இக்கருவியை எளிதில் மாற்றலாம்.
தாய் அந்துப் பூச்சிகள் காய் துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ, வண்டுகள் முதலியவற்றை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். 85 சதவிகிதம் தீமை செய்யும் பூச்சிகளே இக்கருவியில் விழுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள் விடிகாலைப் பொழுதில் அதிகம் வரும்.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூச்சிகளை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது விவசாயிகளுக்கு இக்கருவியை 2,625 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகிறோம். இதே தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பேட்டரியின் மூலம் செயல்படக் கூடிய விளக்குப் பொறியையும் உருவாக்கி, தற்போது 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்கிறார்.

கடந்த பருவத்தில் கத்தரிப் பயிர் செய்திருந்தேன், இந்தச் சோலார் விளக்குப் பொறியை அதில் பயன்படுத்தியதன் மூலம் பூச்சிக்கொல்லிகளுக்குச் செலவிடும் தொகையில் 75 சதவிகிதத்தைக் குறைத்துள்ளேன். விளைச்சலும் அதிகரித்துள்ளது என்கிறார், பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

-உண்மை இதழ்,1-15.9.15

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

வீட்டிலேயே ஆர்கானிக் பூச்சி விரட்டி எப்படித் தயாரிப்பது?

2 கிலோ உரத்துக்கு ஒரு பான்ட் ஆற்றுமணலும், ஒரு பான்ட் செம்மண்ணும் கலந்துகொள்ள வேண்டும். எத்தனை கிலோ ஆர்கானிக் உரமாக இருந்தாலும் இந்த கணக்கின்படி கலந்து கொள்ளலாம். உரத்தை தொட்டியில் நிரப்பி மூன்று, நான்கு நாட்கள் கழிந்த பிறகுதான் நாற்று நடவேண்டும்.

தொட்டிகளில் விதைகளைப் போட்டு, தண்ணீர் விட்டு முளைக்க வைத்து அப்படியே வளர்க்கிற முறையைத்தான் பலரும் செய்கிறார்கள். இப்படி செய்வதைவிட விதைகளை தனியாக முளைக்க வைத்து நாற்றான பிறகு அதை எடுத்து தொட்டிகளிலோ வேறு வளர்ப்பிடத்திலோ நட்டு வளர்ப்பதுதான் செழிப்பான வளர்ச்சிக்கு உதவும்.

தொட்டிகளில் காய்கறிச் செடி, கொடி வளர்க்க நினைக்கிறபோது, கொஞ்சம் பெரிய தொட்டியாக வாங்குவது நல்லது. அப்போதுதான் செடிகளுக்குத் தேவையான உரத்தை நிரப்ப முடியும். மற்ற திட உரங்களைவிட மேலே சொன்ன விதத்தில் தயாராகும் ஆர்கானிக் உரம் மிகவும் லேசாக இருக்கும் என்பதால் நாற்றுகளை நடும்போது செடியோடு அணைத்த மாதிரி முட்டுக் கொடுக்க மண்ணில் சிறிய குச்சிகளைச் செருகிக் கொள்ள வேண்டும்.

விதைகளை நாற்றாக்க டிரேக்கள் கிடைக்கின்றன. முட்டை அடுக்கி வரும் டிரேக்களை வாங்கியும்கூட விதையை முளைக்க வைக்கப் பயன்படுத்தலாம்!

ஆர்கானிக் உரமானது தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையோடு இருப்பதால், ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்றினால் போதும்.

தொட்டிகளில் நடுவதாயின் ஒரு தொட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் நட்டு வளர்க்கலாம். பிளாஸ்டிக் டிரேக்களில் என்றால் ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் 4 முதல் 6 அங்குல இடைவெளி இருக்கும்படி நடவேண்டும்!

செடிகள் பலன் தந்து முடிந்தபின் எடுத்துவிட்டு அடுத்து புதிதாக பயிரிடும்போது வெண்டைக்காய் பயிரான தொட்டியில் தக்காளி, தக்காளி பயிரான தொட்டியில் கத்தரி என மாற்றிப் பயிரிட்டால் செடிகள் செழிப்பாக வளரும்!

ஆர்கானிக் பூச்சி மருந்து எப்படி தயாரிப்பது?

இரண்டு கொத்து வேப்பிலை, 10 பல் பூண்டு, 5 பச்சைமிளகாய் சேர்த்து மைய அரைத்து, அய்ந்து லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டினால் குறைந்த செலவில் தரமான பூச்சி விரட்டி ரெடி! இதை அய்ந்து லிட்டர் தண்ணீரில் கலந்து 100க்கும் மேற்பட்ட செடி கொடிகளுக்கு தெளிப்பு செய்யலாம்.

வேப்பிலை, சாணம் இரண்டையும் காயவைத்து எரித்து, சாம்பலை செடிகளில் தூவி வந்தாலும் பூச்சிகள் அண்டாமல் செடி, கொடிகளை பாதுகாக்கலாம். கடைகளிலும் ரசாயனம் கலக்காத பூச்சி விரட்டி திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, தேவையான தண்ணீர் கலந்து தெளிப்பு செய்யலாம். வீட்டிலேயும் தயாரிக்கலாம்.
-உண்மை,1-15.2.17