சனி, 14 நவம்பர், 2015

எல்லாமே இருக்கு நம் விவசாயத்தில்!


பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்து விட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
அப்பாவுக்கு வியாபாரத்தில் ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்தி ருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.
கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மய்யம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?ன்னு என் கணவரே கேட்டார் - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டு தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
பெண்களால் இயங்கும் மய்யம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மய்யத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மய்யத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
-விடுதலை,10.11.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

திசு வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி பயிற்சி பட்டறை


தஞ்சை, அக்.17_ காவிரி டெல்டா உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்காக புதிய தொழில்நுட்பங் களையும், சந்தை வாய்ப்பு களையும் ஏற்படுத்தி வரு கின்றது.
அதன் தொடர்ச்சியாக திசு வாழை மற்றும் காய் கறி சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சிப் பட் டறை அக்டோபர் 16 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

நபார்டு வங்கி ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், மற்றும் பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகம் இவற்றுடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற் சியை பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசி ரியர் நல்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து தலை மையுரை ஆற்றினார்.
திருச்சி மகளிர் தோட் டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் எம். ஜவகர்லால் முதுகுளம் பகுதி வாழை மற்றும் காய் கறி சாகுபடி திட்டத் தைப்பற்றி அவர் உரை யாற்றும்போது,பழங்கள் மற்றும் மல் லிகை மலர்கள் ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறி, இதுபோல காய்கறிகளுக்கும் செய்ய முடியும் என்று கூறினார். ஜெயின் நிறுவன அலு வலர்கள் தமிழ்ச்செல்வன் குருசாமி, மணி அமுதன் ஆகியோர் திசு வாழை வளர்ப்பு, சொட்டுநீர் பாச னம், நெல்லுக்கு சொட்டு நீர்ப்பாசனம் போன்ற தலைப்புகளிலும் வேளாண் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வெ.பிரகாசம், அங்கக முறையில் காய் கறிச் சாகுபடி செய்யும் முறை பற்றியும், அதற்கான அங்கீகாரம் பெறும் முறைகளைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.
வாழை முன்னோடி விவசாயி இராமகிருஷ் ணன் மற்றும் அங்ககக் காய்கறி விவசாயி முருகன் ஆகியோர் தமது அனுப வங்களை பகிர்ந்து கொண் டனர். சொட்டு நிர்ப்பாச னக் கருவிகள், திசு முறை யில் உருவாக்கிய வாழை மற்றும் மாதுளை கன்று கள், சொட்டு நீர்ப்பாசன முறையில் நெல் உற்பத்திக் கான மாதிரி வயல் போன் றவற்றுடன் பல்கலைக் கழக உயிர்த் தொழில் நுட்பத்துறை மாணவர் கள் உற்பத்தி செய்து வரும் நுண்ணுயிர் இடுபொருள் களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. இந்நிகழ்ச்சியில் 400_க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
=விடுதலை,17.10.15

விவசாயத்தில் முன்மாதிரி பணிகள்: இந்திய பெண்ணுக்கு உயரிய விருது


ஹூஸ்டன், அக். 27-_ அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் சமூக சேவை புரிந்து வந்தவர் அனிதா அடல்ஜா. இந்திய வம்சாவளி பெண் மணியான இவர், பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டார். இதற்காக ஆர்காடியா மய் யம் என்ற பெயரில் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நவீன முறையில் விவசா யத்தில் ஈடுபட்டு வரும் அனிதா அடல்ஜா, மண்வளம் மற்றும் நீர்வள மேம்பாடு, பசுமைக்கூட வாயு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி பணிகளை மேற் கொண்டார். இதனால் மாற்றத்துக்கான சாதனை யாளர் என்ற உயரிய விருதுக்கு, வெள்ளை மாளிகை இவரை தேர்ந்தெடுத்தது.
விவசாயத்தில் சாதனை புரிந்த மேலும் 11 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக் கான விருது நேற்று இரவு வழங்கப்பட்டது. விருது பெற்ற அனிதா அடல்ஜா, ஜிப்சோனியா, பா, வாஷிங் டன் உள்ளிட்ட இடங்களிலும் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை, 0.10.15

வெள்ளி, 6 நவம்பர், 2015

மண் இல்லாமல் தீவன உற்பத்தி: சாதிக்கும் பெண் விவசாயி

மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப் பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா, மண் இல்லாமல் தீவன வளர்ப்பு என்ற நவீன முறையில் ஆடு, மாடுகளுக்கான தீவனங்களை விளைவித்து வருகிறார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய ஆர்வலர்கள் வந்து இவரது தீவன வளர்ப்பு கூடத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
இவரது மாட்டுக் கொட்டகையில் 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறையின் மேல் பகுதி பச்சைவலையால் மூடப்பட்டுள் ளது. அறைக்குள் வெளிச்சம் வரும் வகையில் பாலிதீன் ஷீட்டால் பக்கவாட்டு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் சிறிதளவு மட்டும் வெளிச்சம் வருகிறது.
தரையின் அடித்தளத்தில் முக்கால் அடி உயரத்திற்கு மணல் பரப்பியுள்ளார். ஒரு அடி அகலம், ஒன்றரை அடி நீளம், 3 இன்ச் உயரம் கொண்ட 60 ‘பிளாஸ்டிக் டிரே’ களை வைக்கும் அளவிற்கு ‘ரேக்’ அமைத்துள்ளார்.
இந்த டிரேக்களின் அடிப்பகுதியில் மிகச்சிறிய அளவிலான 12 துவாரங்கள் உள்ளன. டிரேக்களில் தெளிக்கப்படும் தண்ணீர் வெளியேற இந்த ஏற்பாடு.
ஒரு மணி நேரத்திற்கு இரண்டு நிமிடம் வீதம் 60 டிரேக்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அறைக்குள் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் காக்கப்படுகிறது. காற்றின் ஈரப் பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு டிரேயிலும் 350 கிராம் விதைகளை போடவேண்டும். இதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதனை ஈரத்துணியில் 24 மணி நேரம் கட்டி வைக்கவேண்டும். இந்த விதைகள் ஒரு வாரத்தில் 15 செ.மீ. உயரம் வளர்ந்து விடுகிறது. வேர்கள் அடிப்பகுதியில் பின்னிப் பிணைந்து வெள்ளை மெத்தை போல் அழகாக காணப்படுகிறது.
இந்த முறையில் மட்டுமே விதை, இலை, வேருடன் எடுத்து ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கலாம். இம்முறை யில் மக்காச்சோளம், சோளம், கோதுமை, பார்லி விதை கள் வளர்க்கப்படுகின்றன. பசுக்கள், ஆடுகள் வளர்ப்பவர் கள் பசுமைக் கூடாரம் (பாலி ஹவுஸ்) அமைத்தும் வளர்க்கலாம்.
விவசாயி வி.மணிமாலா கூறியதாவது:
சராசரியாக மண்ணில் ஒரு கிலோ பச்சை புல் விளை விக்க பல நாள்கள் காத்திருக்க வேண்டும். பல நூறு லிட்டர் தண்ணீர் செலவிட வேண்டும். நான் பயன் படுத்தும் மண் இல்லா மாட்டுத்தீவன வளர்ப்பு முறையில் தினமும் 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்து கிறேன். பூச்சிகொல்லிகள், ரசாயன உப்புக்கள், களைக் கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. தினமும் 30 கிலோ விளைச்சல் எடுக்கிறேன்.
ஒரு கிலோ விதையில் ஏழே நாளில் 8 கிலோ அறுவடை செய்கிறேன். இந்த முறையின்மூலம் ஆண்டு முழுவதும் சீரான தீவனத்தைக் கால்நடைகளுக்குத் தரலாம். மக்காச்சோளத்தை மாவாக்கி போடுவதைவிட முளைக்க வைத்துப் போடுவது மேலானது. இதன்மூலம் வைட்டமின், மினரல், என்சைம்கள் அதிகரிக்கும்.
முளைகட்டிய இந்த தீவனத்தில் சாதாரணமாக விளையும் தீவனத்தைவிட பல மடங்கு அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் மாடு, ஆடுகள் நல்ல ஊக்கத்துடன் வளர் கின்றன என்றார்.
-விடுதலை,3.11.15

சனி, 5 செப்டம்பர், 2015

வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!

இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் (CERN) விஞ்ஞானி. அணு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிப்பதுதான் அங்கு வேலை. JABLOTRON ALARMS என்ற நிறுவனத்தில் வேலை.
இந்த வேலைகளையும் செய்து கொண்டே வார இறுதிநாட்களில் கடுமையாக உழைத்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான கருவியை அண்மையில் அவர் கண்டுபிடித்துள்ளார். அய்ரோப்பிய கமிஷனின் நிதியுதவியின் கீழ் செயல்படும் கிளைமேட் கே.அய்.சி என்ற அமைப்பு இந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரித்துள்ளது. அய்.நா சபையின் கீழ் இயங்கும் சர்வதேச தொலைத் தொடர்புத்துறை 150 இளம் விவசாயத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதில் அவருக்கு 15 ஆவது இடம்.
கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிக்கும் வேலையில் இருக்கும் உங்களுக்கு எப்படி விவசாயத்தை மேம்படுத்தும் கருவியைக் கண்டுபிடிக்க ஆர்வம் வந்தது? என்று கேட்டால், நான் ஒரு விவசாயியின் மகன் என்கிறார் அழுத்தந் திருத்தமாக.
நம்நாட்டில் எல்லாரும் படிக்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். கணினி தொழில்நுட்பம் முதற்கொண்டு பல வேலைகளுக்குப் போய்விடுகிறார்கள். ஆனால் விவசாயம் செய்யச் செல்வதில்லை.
விவசாயப் படிப்பு படித்தவர்கள் கூட நேரடியாக விவசாய வேலைகளைச் செய்யாமல் அலுவலக வேலைகளுக்குப் போய்விடுகிறார்கள். இது ஏன்? மரபுவழிச் செய்யப்படும் விவசாயத்தை, அறிவியல்பூர்வமாகச் செய்தால், பல இளைஞர்கள் விவசாயத்தை நாடி வருவார்கள்.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு நான்கு ஆண்டுகள் கழித்துச் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் அவர். நல்ல நீர் வளம் உள்ள செழிப்பான ஊரில் தண்ணீர் பற்றாக்குறை. கிணற்றில் கொஞ்சம்தான் தண்ணீர். ஆனாலும் வழக்கம்போல் நிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மின்வெட்டு வேறு. தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும். மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.
நிலத்தின் ஈரப்பதம் எந்த அளவுக்கு உள்ளது? என்பதைக் கணக்கிட முடிந்தால், எந்த இடத்தில் எந்த அளவுக்குத் தண்ணீர் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் தண்ணீரைப் பாய்ச்சினால் போதுமே? இதனால் தேவையில்லாத இடத்துக்கும் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லையே? எனவே நிலத்தின் ஈரப் பதத்தைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன் என்கிறார் அவர்.
அவர் கண்டுபிடித்த கருவி நிலத்தின் ஈரப்பதத்தை மட்டும் கணக்கிடவில்லை. மண்ணில் எந்த அளவுக்கு கார அமிலத்தன்மைகள் உள்ளன; அதாவது என்னென்ன சத்துகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதையும் கணக்கிடுகிறது.
இந்தக் கருவியை ஆங்காங்கே நிலத்தில் புதைத்து வைத்துவிட வேண்டும். ஒரு நிலத்தில் குறைந்தது 5_8 கருவிகளைப் புதைத்து வைத்துவிட வேண்டும். இந்தக் கருவியில் சென்சார்கள் உள்ளன. அவற்றின் மூலம் நிலத்தின் ஈரப்பதம், நிலத்தில் உள்ள கார, அமிலத்தன்மையைக் கருவி கணக்கிட்டு விடும். அந்தத் தகவல்கள் நிலத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்எம் மோடத்துக்கு வந்துவிடும். அதிலிருந்து செல்போன் டவர் மூலமாக சர்வருக்குத் தகவல்கள் போய்விடும். விவசாயி வைத்திருக்கும் செல்போனின் சிம் கார்டு மூலமாக சர்வரில் உள்ள இந்தத் தகவல்கள் செல்போனில் தெரிய வரும்.
நிலத்தில் தண்ணீர் இல்லையா? சிவப்பு நிறம் தெரியும். தண்ணீர் இருக்கிறதா? பச்சை நிறம் தெரியும். இராஜபாளையத்து விவசாயி ஏதோ ஒரு வேலையாகச் சென்னைக்கு வந்துவிட்டால், செல்போனைப் பயன்படுத்தி சென்னையில் இருந்தே இராஜபாளையம் நிலத்துக்கு நீர் பாய்ச்ச முடியும். இனிமேல் நீர் பாய்ச்சத் தேவையில்லை என்றால் உடனே நிறுத்திவிடவும் முடியும் என்கிறார் விஜயராகவன்.
மண்ணின் கார, அமிலத் தன்மை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டால் எந்த நிலத்துக்கு எந்த உரங்களை எவ்வளவு போட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பயிர் விளையவில்லையே என்று ஒரு விவசாயி கண்ணீர் விடாமல், தேவையான உரங்களைப் போட்டு பயிரை நன்றாக விளைய வைத்துவிடலாம்.
சொட்டு நீர்ப் பாசனம் நடைபெறும் இடங்களில் சொட்டுநீர்க் குழாயில் இந்தக் கருவியைப் பொருத்திவிட்டால், எந்த அளவு தண்ணீர் நிலத்துக்குத் தேவைப்படுமோ, அந்த அளவுத் தண்ணீர் மட்டுமே குழாயிலிருந்து வெளிவரும். தண்ணீர் தேவையில்லை என்றால் தானாகவே நின்றுவிடும். இதனால் தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படும். ஒரு துளி கூட வீணாகாது என்கிறார்.
தஞ்சாவூர் பகுதிகளின் நிலங்களில் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தினால், அந்தப் பகுதிக்கு எவ்வளவு தண்ணீர் தேவை? எந்தெந்த உரங்கள் எவ்வளவு தேவை? என்பன போன்ற தகவல்களை அரசு தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிடுவதைப் பற்றி, உரங்களை உற்பத்தி செய்வதைப் பற்றி அரசு முடிவெடுக்க முடியும்.
இந்த நிலத்துக்கு இந்த உரத்தை இவ்வளவுதான் போட வேண்டும் என்பது தெரிந்துவிட்டால், தேவையில்லாத உரங்கள், அளவுக்கு அதிகமான உரங்கள் போடத் தேவையில்லை. நிலமும் கெட்டுவிடாது. இந்தக் கண்டுபிடிப்பால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவையும் குறைக்கலாம் என்கிறார் விஜயராகவன்.
இந்தக் கருவி இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதை உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும் என்பதால்தான், பலநாடுகள் அங்கீகரித்து உதவி செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு தனக்கு உதவியாக தமிழகத்தில் அஸ்லாம், அனூப், ஆனந்த், முத்துசாமி, மகாலக்ஷ்மி, ஜெயராமன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்கிறார் விஜயராகவன்.
விஜயராகவனுக்கு நமது உளமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
-உண்மை,16-31.8.15

வியாழன், 23 ஜூலை, 2015

"நெல்லுக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவின் முயற்சி முறியடிப்பு


புதுடில்லி, ஜூலை 6_ நெல் பயிர் தங்கள் நாட்டில் தான் உருவானது என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்று, சொந்தம் கொண் டாட சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய விஞ் ஞானிகள் முறியடித்துள்ள தாக ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் தெரி வித்தார். நெல் பயிர் இந்தி யாவில்தான் உருவானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக, தில்லியை தலைமையிட மாகக் கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறு வனத்தின், செடிகளுக்கான உயிரி தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத் தில் பணிபுரியும் தலைமை ஆராய்ச்சியாளர் நாகேந் திர குமார் சிங் கூறுகை யில், ""நெல் பயிர் இந்தி யாவில் உருவானது என்ற உண்மை எங்களது ஆராய்ச் சியின் மூலம் நிரூபிக்கப் பட்டது'' என்று தெரி வித்தார். இதுதொடர்பாக சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் "நேச்சர் சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்' பத்திரிகையில் ஆதாரங்களுடன் நமது விஞ்ஞானிகள் கட்டுரை எழுதியுள்ளனர். இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் நெல் பயிர் வளர்க்கப்பட் டது என்ற கருத்து கடந்த 20ஆம் நூற்றாண்டு வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக இருந்தது. இதனிடையே, அமெ ரிக்காவைச் சேர்ந்த அறி வியலுக்கான தேசிய கல்வியகத்தில் 2011ஆம் ஆண்டு சீனா ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவில் நெல் தோன்றியதாக கூறப் பட்டது. மேலும் சீனாவின் யாங்ட்ஸ பள்ளத்தாக்கில் சுமார் 8,200- 13,500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக நெல் பயிரிடப்பட்டது. அதுவே நெல் பயிரின் தோற்றம் என்று அந்த ஆராய்ச்சி யில் தெரிவிக்கப்பட்டது.
-விடுதலை,7.7.15

.